இங்கிலாந்தில் தினசரி ஒமிக்ரோன் தொற்று நோயாளர் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைத்து வகைக் கொரோனா தொற்று நோயாளர் தொகை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் நாட்டில் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடுவதால் தொற்று பரவல் தீவிரமடையலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நெதர்லாந்து நான்காவது சமூக முடக்க நிலையை அறிவித்துள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி வரை இந்த சமூக முடக்க உத்தரவு அமுலில் இருக்கும். அத்துடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின்னர் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாட்டில் தொற்று நோய் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது எனத் தெரிவித்தார். லண்டனில் மருத்துவமனை சேர்க்கை செங்குத்தாக அதிகரித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
மக்களைப் பாதுகாக்க கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டி ஏற்பட்டால் அதனைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் அவா் கூறினார்.
ஒமிக்ரோன் தொற்று ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் வேகமாகப் பெருகி வருகிறது. லண்டன் மற்றும் பிற இடங்களில் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் ஒமிக்ரோன் தொற்று நோயாளர் தொகை இரட்டிப்பாகி வரும் நிலையியே பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை 12,133 பேருக்கு ஒமிக்ரோன் உருத்திரிபு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,059 ஆக இருந்தது.
டெல்டா திரபு கொரோனாவைவிட ஒமிக்ரோன் தீவிர பாதிப்புக்களை வெளிப்படுத்தவில்லை என ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகள் கூறினாலும் இதன் பரவல் வேகம் அச்சுறுத்தலாக உள்ளது.
இதேவேளை, 12,133 ஒமிக்ரோனா தொற்றாளர்கள் உட்பட அனைத்து வகை கொரோனா திரிபு தினசரி தொற்று நோயாளர் தொகையும் ஒரு இலட்சத்தை நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 91,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த ஒமிக்ரோன் தொற்று நோயாளர் எண்ணிக்கை 37,101-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலைமை குறித்து ஆராயப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கடுமையான பொதுமுடக்க விதிகளை அறிவிக்க அரசு அவசரம் காட்டாது என்றார்.
எனினும் தேவைப்பட்டால் நிலைமையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
மக்கள் கொரோனா சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமா் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடும் நிலை இன்னமும் உள்ளது. எனினும் என்னால் உத்தரவாதம் எதையும் உடனடியாக அளிக்க முடியாது என அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமா் டொமினிக் ராப் கூறினார்.
இதற்கிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடுகளையும் பிரதமா் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பது அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடி அளிக்கும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அவா் மீதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பதால் கிறிஸ்துமஸ் வரை பிரிட்டனில் புதிய கட்டுப்பாடுகள் இருக்காது எனவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து